IoT என்பது Internet of Things (இணைய பொருட்கள் / சாதனங்கள்) என்பதன் சுருக்கமாகும். இச்சொல் பொதுவாக இணையத்துடன் இணைந்துள்ள எந்த ஒரு கருவியையும் குறித்து நிற்கிறது. பரம்பரிய கணினிகளான மேசைக்கணினி, மடிக்கணினிகளில் ஆரம்பித்து இன்றைய டேப்லட் கணினி, ஸ்மாட் தொலைபேசி மற்றும் அண்மைக் காலங்களில் இணைய வசதி இயலுமாக்கப்பட்ட பல கருவிகள் இந்தப் பட்டியலில் அடங்குகின்றன.
உதாரணமாக வீட்டு உபகரணங்கள், பதுகாப்பு கேமாராக்கள், வாகனங்களில் பொருத்தும கருவிகள், உடம்பில் அணியக் கூடிய கருவிகள் என ஏராளம் கருவிகள் இந்த IoT யில் அடக்கம்.
ஒரு கருவி Internet of Things எனும் பட்டியலில் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமெனின் அது இணையத்திலுள்ள இன்னுமொரு கருவியுடன் தொடர்பாடக் கூடியதாயிருத்தல் வேண்டும். எனவே அக்கருவி வயர் மூலமாகவோ (wired) அல்லத் வயரின்றியோ (wireless) தொடர்பாடல் வசதியைப் பெற்றிருக்க வேண்டும்.
அனேகமான கருவிகள் வைஃபை Wi-Fi இணைப்பைக் கொண்டதாயிருக்கும். எனினும் ப்லூடூத் (Bluetooth) தொழிநுட்பம் கூட அருகிலுள்ள கருவியுடன் இணைந்து தரவுகளைப் பரிமாற உதவும்.
இணையத்துடன் நேரடியாகத் தொடர்புறும் எக்கருவியும் ஐபி முகவரி எனும் தனித்துவமான ஒரு இலக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
IoT கருவிகள் “smart devices” கருவிகள் எனவும் அழைக்கப்படும். ஏனேனில் அவை இன்னுமொரு கருவியுடன் தொடர்பாட முடிகிறது.
உதாரணமாக ஒரு பாரம்பரீய மின்சார அடுப்பை (electric oven) நீங்கள் தொலை தூரத்தில் எங்காவது இருக்கும் போது கட்டுப் படுத்த முடியாது. எனினும் தற்போதைய இணையத்த்டன் இணைந்த “ஸ்மாட் அடுப்புகளை” தொலைவிலிந்ருது ஒரு வெப் ப்ரவுஸர் மூலமாகவோ அல்லது ஸ்மாட் கையடக்கத் தொலை பேசியில் நிறுவியிருக்கும் அப்லிகேசன் மூலமாகவோ கட்டுப் படுத்த முடியும். அடுப்பின் தற்போதைய நிலையை அவதானித்து நீங்கள் வீடு சென்று சேருமுன் அடுப்பிலிருக்கும் ஒரு பாத்திரத்தை சூடாக்க முடியும். இது போன்ற பல வீட்டு உபகரணப் பொருட்கள் தற்போது IoT பட்டியலில் இணைந்துள்ளன,.
IoT என்பது இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருந்தாலும் எதிர்காலத்தில் இன்னும் பல வசதிகளை எமக்கு வழங்க இருக்கின்றன. உதாரணமாக மருத்துவ உபகரணங்களை இணையத்துடன் இணைக்கும் போது ஒரு நோயாளியின் நோயின் தன்மையை ஒரு வைத்தியரால் தொலைவிலிருந்தே நம்பகமான தரவுகளுடன் இலகுவாகக் கண்டறிய முடியும், இணைய வசதி கொண்ட வாகனங்கள் ஒன்றோடொன்று தொடர்பாடலில் ஈடுபடுவதன் மூலம் வாகன நெறிசல் பற்றிய தகவல் அறிந்து வேறு பாதையில் பயணிக்க முடியும். மேலும் சாரதியில்லாத வாகனங்களின் வருகைக்கும் வழி வகுக்கும். இவ்வாறு பல வசதிகளை எதிர் கால சந்ததியினர் அனுபவிக்கவிருப்பதோடு எதிர்காலத்தில் IoT என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே இருக்கப் போகிறது என்பதை உறுதியாகக் கூறலாம்.